17.7.16

முதன்மை சார்பு நீதிமன்றம்¸ மதுரை ,மேல்முறையீடு வழக்கு எண்.11/2014

முதன்மை சார்பு நீதிமன்றம்¸ மதுரை
முன்னிலை திரு.பி.சரவணன்¸ பி.எல்
முதன்மை சார்பு நீதிபதி¸ மதுரை.
2014ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11ம் நாள் வியாழக்கிழமை.
மேல்முறையீடு வழக்கு எண்.11/2014
1. ரெங்கம்மாள்.
2. பொன் இருளப்பன். … மேல்முறையீட்டாளர்கள்/வாதிகள்
/எதிர்/
.முத்துராமலிங்கம். … எதிர்மேல்முறையீட்டாளர்/பிரதிவாதி

அசல் வழக்கு எண்.92/2011ல் 19.12.2013 அன்று மதுரை நகர்¸ கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணையை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடு.

1. ரெங்கம்மாள்.
2. பொன் இருளப்பன். … வாதிகள்
/எதிர்/
.முத்துராமலிங்கம். … பிரதிவாதி

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

தாவா சொத்தில் இருந்து வரும் வாதிகளின் அமைதியான அனுபவம் மற்றும் சுவாதீனத்தைப் பிரதிவாதியோ அவருடைய ஆட்களோ எந்த வகையிலும் இடையூறு செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம் வழங்கிடக் கோரி வாதிகள் தாக்கல் செய்த வழக்கு.

இந்த மேல்முறையீட்டை அனுமதித்து¸ அசல் வழக்கு எண்.92/2011ல் 19.12.2013 அன்று மதுரை நகர்¸ கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணையை நீக்கறவு செய்யக் கோரி வாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு.

2. விசாரணை நீதிமன்றத்தில் வாதிகள் தாக்கல் செய்துள்ள வழக்குரையின் சுருக்கம் பின்வருமாறு-
தாவா சொத்து காலி மனையாகும். வாதிகள் தாவா சொத்திற்கு வடபுறம் ஓட்டு வீடு மற்றும் காரை வீடுகள் கட்டியுள்ளனர். மேற்படி வீடுகளுக்கு வாதிகள் முறையாக வீட்டு வரி¸ மின்சார வரி செலுத்தி அனுபவித்து வருகின்றனர். வாதிகள் மற்றும் அவர்களுடைய முன்னோர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆடு மாடுகள் கட்டியும்¸ வைக்கோல் படப்பு வைத்தும்¸ வீட்டுக் கொல்லையாகவும்¸ மற்றவர்களுக்கு தெரிந்தே தொடர்ந்து எந்தவித இடையூறுமின்றி அனுபவித்து வருகிறார்கள். பிரதிவாதிக்கு கிரயம் செய்து கொடுத்ததாகக் கூறப்படும் முன்னோர்களான சோலை.மாரிமுத்து மற்றும் பி.முருகேசன் ஆகியவர்களுக்கு தாவா சொத்து சட்டப்படி பாத்தியமானதல்ல. அவர்கள் தாவா சொத்தைப் பொறுத்து அவர்களுடைய உரிமையை நிரூபித்து¸ பின்னர் மாநகராட்சியில் அனுமதி பெற்று கட்டிடம் கட்ட வேண்டும். மேற்படி சோலை.மாரிமுத்து மற்றும் பி.முருகேசன் ஆகிய இருவரும் மாநகராட்சியில் அனுமதி பெறாமல்¸ தாவா சொத்தில் அத்துமீறி நுழைந்து¸ 25.09.2008 அன்று காலை கட்டிடம் கட்ட எத்தனித்தனர். எனவே வாதி அசல் வழக்கு எண்.874/2008ஐத் தாக்கல் செய்தார்¸ அவ்வழக்கில் மேற்படி இருவரும் இவ்வழக்கு பிரதிவாதிக்கு தாவா சொத்தை விற்றுவிட்டதாக தெரிவித்தனர். தாவா சொத்தை அபகரிக்கும் நோக்கில் மோசடியாக கிரய ஆவணங்களை உற்பத்தி செய்துள்ளனர். பிரதிவாதி நீதிப்பேராணை எண்.2523/2009ஐத் தாக்கல் செய்து பட்டாவை அவர் பெயருக்கு மாற்றம் செய்ய உத்தரவிடுமாறு கோரியுள்ளார். மேற்படி அசல் வழக்கில் இந்த வழக்கு பிரதிவாதியை கட்சி சேர்க்க கோரி தாக்கல் செய்த வ..எண்.1129/2008ல்¸ பிரதிவாதிக்கு எதிராக தனி வழக்கு தாக்கல் செய்து கொள்ள உரிமை கொடுத்து¸ மனு 11.01.2011 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் 17.01.2011 அன்று 1ம் வாதி தாவா சொத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பிரதிவாதி மீண்டும் தாவா சொத்தில் அத்துமீறி நுழைந்து வானம் தோண்ட போவதாக பிரஸ்தாபித்தார். பிரதிவாதியின் மேற்படி செய்கை சட்டவிரோதமானது. எனவேதான் பிரதிவாதிக்கு எதிராக உறுத்துக் கட்டளைப் பரிகாரம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்வழக்குரை சுருக்கம் பின்வருமாறு
தாவா சொத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்பிருந்தே கூரை வீடு உள்ளது¸ தாவா சொத்து மாரிமுத்து என்பவரின் அனுபவத்தில் இருந்து வந்து¸ அவர் தாவா சொத்து மற்றும் அதன் அருகில் உள்ள 1556 சதுரடி நிலத்தை 18.06.2008 நாளிட்ட பதிவுறு கிரய ஆவணம் மூலம் முருகேசன் என்பவருக்கு கிரயம் செய்தார். மேற்படி முருகேசன் தாவா சொத்தை இந்த பிரதிவாதிக்கு கடந்த 21.10.2008 அன்று பதிவுறு கிரய ஆவணம் மூலம் கிரயம் செய்துவிட்டார். அன்று முதல் பிரதிவாதியின் அனுபவத்தில் தாவா சொத்து உள்ளது. வாதிகள் கூறுவதுபொல் தாவா சொத்து காலி மனை அல்ல¸ அதனை 30 வருடங்களாக வாதிகள் அனுபவித்து வருவதாக கூறுவதும் உண்மையல்ல¸ சோலை.மாரிமுத்து மற்றும் முருகேசன் தாவா சொத்தில் அத்துமீறி நுழைந்ததாக கூறுவதும் மறுக்கப்படுகிறது. இந்த வாதிகள் தாக்கல் செய்த அசல் வழக்கு எண்.874/2008ல் இந்த பிரதிவாதியை தரப்பினராக சேர்க்கக் கோரி தாக்கல் செய்த மனு வ..எண்.1129/2008 ஆனது தகுதியின் பேரில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தாவா சொத்தில் கூரை வீட்டில் வசித்து வரும் பிரதிவாதி¸ மாநகராட்சியிடம் அனுமதி பெற்று கட்டிடம் கட்ட முயற்சி செய்து வருகிறார். வழக்குரையில் சொல்லப்பட்டுள்ள வழக்கெழு மூலம் தவறானது. எனவே வழக்கை செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யவேண்டும்.

4. இந்த வழக்கைத் தீர்வு காண விசாரணை நீதிமன்றம் இரண்டு எழுவினாக்களை வனைந்துள்ளது. வாதிகள் தரப்பில் வா.சா.1 மற்றும் வா.சா.2 விசாரிக்கப்பட்டு¸ வா.சா..1 முதல் வா.சா..25 வரையிலான சான்றாவணங்கள் குறிக்கப்பட்டுள்ளன. பிரதிவாதி தரப்பில் பி.வா.சா.1 மற்றும் பி.வா.சா.2 விசாரிக்கப்பட்டு¸ பி.வா.சா..1 முதல் பி.வா.சா..26 வரையிலான சான்றாவணங்கள் குறிக்கப்பட்டுள்ளன. விரிவான விசாரணை மேற்கொண்ட பின்னர்¸ விசாரணை நீதிமன்றம் செலவு தொகையின்றி வாதிகளின் வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பில் குறை கண்ட வாதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

5 . மேல்முறையீட்டின் சுருக்கம் -
விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணை சட்டம்¸ சாட்சியம் மற்றும் சங்கதிகளுக்கு மாறானது. விசாரணை நீதிமன்றமானது அசல் வழக்கில் குறியீடு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை சரிவர பரிசீலனை செய்யாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது. வா.சா..13 மற்றும் வா.சா..14ல் உள்ள கிரயதார்களை அசல் வழக்கில் சாட்சிகளாக பிரதிவாதி தரப்பில் விசாரணை செய்யப்படவில்லை. வா.சா..13 மற்றும் வா.சா..14 வழக்கிற்காக தயாரிக்கப்பட்டவை. வா.சா..13 மற்றும் வா.சா..14ல் உள்ள தரப்பினர்கள் தாவா சொத்தை அனுபவம் செய்யவில்லை என்ற விவரத்தை அசல் வழக்கு எண்.874/2008ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்தை அபகரிக்கும் நோக்கத்திற்காக வா.சா..13 மற்றும் வா.சா..14ல் கதவு எண்.47/1 என குறிப்பிடப்பட்டுள்ளது. அது 2ம் வாதிக்குப் பாத்தியமானது. வா.சா..15 மற்றும் வா.சா..25 அரசாங்க ஆவணங்களாகும். அவற்றில் உண்மை இல்லை என மறுதலிக்க வேண்ழய கடமை பிரதிவாதியைச் சாரும். ஆனால் அந்த ஆவணத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்ழய கடமை வாதிகளைச் சாரும் என கீழ்மைநீதிமன்றம் விடை கண்டுள்ளது. வழக்கானது அனுபவத்தின் அடிப்படையில் நிரந்தர உறுத்துக் கட்டளை வேண்டி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்¸ சொத்தைப் பொறுத்து விளம்புகைப் பரிகாரம் கோர வேண்டும் என்று கீழ்மைநீதிமன்றம் விடை கண்டுள்ளது தவறானது. ஆகவே மேல்முறையீடை அனுமதித்து அசல் வழக்கு எண்.92/2011ல் 19.12.2013 அன்று மதுரை நகர்¸ கூடதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணையை இரத்து செய்ய வேண்டும்.

6. இம்மேல்முறையீட்டை சௌகரியமாக ஆராய்வதற்காக விசாரணை நீதிமன்றத்தில் தரப்பினர்கள் அழைக்கப்பட்ட வண்ணமே வாதிகள்¸ பிரதிவாதி என்றே இம்மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் அழைக்கப்படுகிறார்கள்.

7.இந்த மேல்முறையீட்டில் தீர்வு காணப்படவேண்ழய முக்கிய பிரச்சினைகள் யாதெனில்¸
1) தாவா சொத்தைப் பொறுத்து விளம்புகைப் பரிகாரம் கோர வேண்டும் என்று கீழ்மைநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு சரிதானா?
2) தாவா சொத்தைப் பொறுத்து வாதிகள் கோரிய நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம் அவர்களுக்கு கிடைக்கத்தக்கதா?
3) அசல் வழக்கு எண்.92/2011ல் 19.12.2013 அன்று மதுரை நகர்¸ கூடதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணையை மாற்றி அமைக்க போதுமான காரணங்கள் உள்ளதா?
4) வேறு என்ன பரிகாரம்-

8 . பிரச்சினைகள் 1 முதல் 4-க்கான தீர்வு -
வாதிகளின் குறிப்பானை வழக்கு யாதெனில்¸ தாவா சொத்து காலி இடம் என்றும்¸ அதை வாதிகள் அனுபவம் செய்து வருவதாகவும்¸ அதில் பிரதிவாதி அத்துமீறி நுழைய முயற்சித்ததாகவும்¸ ஆகவே வாதிகளின் அனுபவத்தை பிரதிவாதி தடை செய்யாமல் இருக்கும் வண்ணம் நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம் வேண்டி வாதிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. பிரதிவாதியின் குறிப்பான வழக்கு யாதெனில்¸ தாவா சொத்தில் ஏற்கனவே கூரை வேய்ந்த குடிசை இருந்ததாகவும்¸ அதை பிரதிவாதியின் முன்பாத்தியஸ்தர்கள் அனுபவம் செய்து வந்ததாகவும்¸ அதன் பிறகு பிரதிவாதி தாவா சொத்தை முறையாக கிரயம் பெற்றுள்ளதாகவும்¸ பிரதிவாதியின் அனுபவத்தில் தான் தாவா சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்மைநீதிமன்றமானது வாதிகளின் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதனை எதிர்த்து வாதிகள் இந்த மேல்முறையீடு வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

9. வாதிகள் தாவா சொத்தை தாங்கள் தொடர்ந்து அனுபவம் செய்து வருவதாகவும்¸ தாவா சொத்துக்கு பட்டா எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதிவாதி தரப்பில் தாவா சொத்துக்கு நத்தம் பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாகவும்¸ மேலும் வா.சா..13¸ வா.சா..14 அடிப்படையில் பிரதிவாதி தாவா சொத்தில் உரிமை கொண்டாடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்¸ கீழ்மைநீதிமன்றமானது வாதிகளின் உரிமையை பிரதிவாதி மறுத்துள்ள நிலையில்¸ விளம்புகைப் பரிகாரம் கோரவேண்டும் என தெரவித்துள்ளது. வாதிகள் தாவா சொத்தில் அனுபவ பாத்தியத்தின் அடிப்படையில் நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம் கோரியுள்ளார்கள். அதைத் தவிர வேறு எந்த உரிமையும் கொண்டாடவில்லை. தாவா சொத்துக்கு பட்டா வழங்கப்பட்டதாக வாதிகள் தரப்பில் கூறப்படவில்லை. ஆவணங்கள் அடிப்படையில் உரிமை கோராத நிலையில்¸ நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தாவா சொத்து யாருடைய அனுபவத்தில் உள்ளது என்பதைக் கண்டறிய வேண்டுமே தவிர¸ உரிமையை நிர்ணயம் செய்ய தேவையில்லை. ஆகவே கீழ்மைநீதிமன்றம் தாவா சொத்துக்கு விளம்புகைப் பரிகாரம் கோர வேண்டும் என்று விடை கண்டுள்ளது சரியானதல்ல.

10. வாதிகள் தாவா சொத்து தங்களுடைய அனுபவத்தில் இருப்பதாக வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில்¸ அதை நிரூபிக்க வேண்டிய கடமை வாதிகளைச் சாரும். இந்நிலையில் பிரதிவாதி தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் தன் வாதுரையின்போது¸ 2003 (3) CTC 229 – Saraswathy and two others /vs/ Tamizharasi and another என்ற வழக்கில் வழங்கப்பட்ட முன்தீர்ப்புரையைச் சுட்டிக்காட்டி¸ நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரத்திற்காக வாதி வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில்¸ வாதியின் வழக்கை நிரூபிக்க வேண்டிய கடமை வாதிகளைச் சாரும் என குறிப்பிட்டு வாதிட்டார். வாதிகள் தாவா சொத்தை அனுபவம் செய்து வருகிறார்கள் என்பதை எடுத்துரைக்க வா.சா..9¸ வா.சா..10 மற்றும் வா.சா..20 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா..9 என்பது 1ம் வாதி பெயரில் பசலி 1417க்கு பட்டா எண்.1016க்கு செலுத்தப்பட்ட தீர்வை இரசீது. வா.சா..10 என்பது 2ம் வாதி பெயரில் பசலி 1417க்கு பட்டா எண்.1017க்கு செலுத்தப்பட்ட தீர்வை இரசீது. வா.சா..20 என்பது 1ம் வாதி ரெங்கம்மாள் பெயரில் உள்ள பட்டா எண்.சி.417க்கு உண்டான தீர்வை இரசீது ஆகும். மேற்படி தீர்வை இரசீதுகள் பற்றி வா.சா.1 மற்றும் வா.சா.2 தங்கள் சாட்சியத்தில் கூறியுள்ளனர். தீர்வை இரசீதுகளில் உள்ள பட்டா யாருடைய பெயரில் உள்ளது என்பதை எடுத்துரைக்க ஆவணம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் வாதிகள் வழக்கு யாதெனில்¸ தாவா சொத்துக்கு பட்டா வழங்கப்படவில்லை என்பதாகும். அவ்வாறான நிலையில்¸ வா.சா..9¸ வா.சா..10 மற்றும் வா.சா..20 ஆவணங்கள் தாவா சொத்துக்கு சம்பந்தப்பட்டது என்பதை வாதிகள் தரப்பில் நிரூபிக்கவில்லை. வாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வா.சா..15¸ வா.சா..25ன்படி பார்க்கும்போது¸ தாவா சொத்துக்கு பட்டா கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி தீர்வை இரசீதுகள் தாவா சொத்துக்கள் சம்பந்தப்பட்டவை என்பதை எடுத்துரைக்கவோ¸ அவற்றில் குறிப்பிடப்பட்ட பட்டா வாதிகள் பெயரில் தான் உள்ளன என்பதை எடுத்துரைக்கவோ¸வாதிகள் தரப்பில் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

11. வா.சா..13 மற்றும் வா.சா..14 கிரயத்தின் உண்மைத் தன்மையை பிரதிவாதி தரப்பில் நிரூபிக்கவில்லை என வாதிகள் தரப்பில் வாதம் எடுத்துரைக்கப்பட்டது. பிரதிவாதியின் முன்பாத்தியஸ்தர்கள் மீது வாதிகள் அசல் வழக்கு எண்.874/2008ஐத் தாக்கல் செய்துள்ளனர் என்றும்¸ அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குரையின் சான்றிட்ட நகல் இந்த வழக்கில் வா.சா..11 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. வா.சா..11ஐப் பார்க்கும்போது¸ திருமதி.சோலை மாரியப்ப முத்து தாவா சொத்தில் தென்னங்கீற்றால் செட் போட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. வா.சா.1 தன்னுடைய சாட்சியத்தில் வா.சா..13ல் கிரயம் வாங்கிய முருகேசன் என்பவர் தாவா சொத்தை வா.சா..14 கிரயப் பத்திரத்தின் மூலம் பிரதிவாதிக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார் என்றால் சரிதான் என்று குறிப்பிட்டுள்ளார். வா.சா.2 தன்னுடைய சாட்சியத்தில் முருகேசன் கிரயம் பெற்ற பிறகு தாவா சொத்திற்கு வரி செலுத்தி வந்துள்ளார் என்று சொன்னால் சரி தான்¸ ஆனால் முறைகேடாக செலுத்தி வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தன் சாட்சியத்தில் முருகேசன் தாவா சொத்தை வா.சா..14ன் அடிப்படையில் பிரதிவாதிக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார் என்று சொன்னால் சரிதான் என்று கூறியுள்ளார். வா.சா.1¸ வா.சா.2 தங்கள் சாட்சியத்தில் மேற்படி கிரயத்தைப் பற்றி ஒத்துக்கொண்டுள்ள நிலையில்¸ ஏற்கனவே வாதிகள் அசல் வழக்கு எண்.874/2008ல் தாக்கல் செய்துள்ள வழக்குரையில்¸ பிரதிவாதியின் முன்பாத்தியஸ்தர்கள் தாவா சொத்தில் தென்னை ஓலையால் குடிசை போட்டு இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கிரயப் பத்திரங்களான வா.சா..13¸ வா.சா..14 நிரூபிக்கப்பட வேண்டும் என வாதிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதத்தைஇந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

12. வா.சா..13ஐப் பார்க்கும்போது¸ அதில் குடிசை உள்ள விவரத்தையும்¸ அதற்கு முதலில் குறைவான முத்திரை தீர்வை செலுத்தப்பட்டுள்ளது என்றும்¸ ஆய்வுக்கு பிறகு கூடுதலாக முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் இந்நீதிமன்றத்தால் அறியமுடிகிறது. வாதிகள் குறிப்பிடுவதுபோல்¸ தாவா சொத்து காலிமனையாக இருந்திருந்தால்¸ கூடுதல் முத்திரைத்தீர்வை என்ற நிலை எழ வாய்பில்லை. வா.சா.2 தன்னுடைய சாட்சியத்தில் வா.சா..14 தேதி முதல் பிரதிவாதி தாவா சொத்திற்கு வரி செலுத்தி அனுபவம் செய்து வந்துள்ளார் என்றால்
சரிதான் என குறிப்பிட்டுள்ளார். வா.சா.1 மற்றும் வா.சா.2 தங்கள் சாட்சியத்தில்¸ தாவா சொத்தில் பிரதிவாதி வீடு கட்ட மாநகராட்சியிடம் அனுமதி வேண்டி கடிதம் கொடுத்துள்ளார் என்ற விவரத்தை ஒத்துக்கொண்டுள்ளனர். வா.சா.1¸ வா.சா.2ன் சாட்சியங்கள் வாதிகள் தரப்பு வழக்குக்கு விரோதமாக உள்ள நிலையிலும்¸ மேலும் வா.சா..14 கிரயப் பத்திரத்திற்கு பிறகு பிரதிவாதிதான் தாவா சொத்தில் வரி செலுத்தி அனுபவம் செய்து வருகிறார் என வா.சா.2 ஒப்புக்கொண்டுள்ள நிலையிலும்¸
வாதிகள் தான் தாவா சொத்தின் அனுபவத்தில் உள்ளனர் என்ற வாதிகள்தரப்பு வழக்கை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

13. வாதிகள் தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் தன் வாதுரையின்போது¸ வாதிகள் தரப்பில் குறியீடு செய்யப்பட்டுள்ள வா.சா..15¸ வா.சா..25 ஆவணங்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டிய கடமை வாதிகளுக்கு இல்லை என்றும்¸ அவை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்கள் என்றும்¸ அவற்றின் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். வா.சா..25ஐ பார்க்கும்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 1ம் வாதிக்கு 13.02.2013 அன்று பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பார்வை-2 ஆக 18.02.2013 அன்று கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 18.02.2013 அன்று கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை கொடுத்து இருந்தால் அதற்கு பிறகுதான் தகவல் வழங்கும் அலுவலரால் பதில் கொடுக்கப்பட்டு இருக்குமேயொழிய¸ அதற்கு முன்பாகவே அதாவது 13.02.2013 அன்று பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது. ஆகவே வா.சா..25ல் உள்ள விவரம் உண்மையானதா என்பதைப் பொறுத்து சந்தேகம் எழுகிறது. பிரதிவாதி வரி செலுத்தி அனுபவம் செய்து வருவதாக வா.சா.2 சாட்சியே ஒத்துக்கொண்டுள்ள நிலையில்¸ பிரதிவாதியின் தரப்பில் தாக்கல் செய்துள்ள வரி இரசீதுகளின் உண்மைத் தன்மையை மறுதலிக்க வேண்டிய கடமையும் அத்துடன் வருவாய் துறையினரை சாட்சிகளாக விசாரணை செய்து வழக்கின் தன்மையை எடுத்துரைக்க வேண்டிய கடமையும் வாதிகளைச் சாரும். ஆனால் வாதிகள் அவ்வாறு முயற்சிக்கவில்லை. வா.சா.2 தன் சாட்சியத்தில்¸ பிரதிவாதி தாவா சொத்தில் அனுபவம் செய்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ள நிலையில்¸ வா.சா..15க்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. மேற்கூறிய காரணங்கள் அடிப்படையில் வழக்கின் வாதிகள் அவர்களுடைய வழக்கை நிரூபிக்காத நிலையில்¸ கீழ்மைநீதிமன்றமானது அசல் வழக்கை தள்ளுபடி செய்து பிறப்பித்துள்ள தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணை செல்லத்தக்கது என்றும்¸ அதனை மாற்றி அமைக்கப் போதுமான காரணங்கள் இல்லை என்றும்¸ இந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யத்தக்கது என்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

இறுதியாக¸ அசல் வழக்கு எண்.92/2011ல் 19.12.2013 அன்று மதுரை நகர்¸ கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணையை உறுதி செய்து¸ இம்மேல்முறையீடு செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.



No comments:

Post a Comment