17.5.16

சொத்துரிமை மாற்று சட்டம் பிரிவு 106-ன் கீழ் அறிவிப்பு கொடுத்து வாடகைதாரரை சட்டப்படி வெளியேற்றுதல்

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். புதுக்கோட்டை
முன்னிலை திரு. எஸ். பிரின்ஸ் சாமுவேல் ராஜ் பி.ஏ.பி.எல்.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி, புதுக்கோட்டை
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7ஆம் நாள் வியாழக்கிழமை
திருவள்ளுவராண்டு 2047 பங்குனி திங்கள் 25ஆம் நாள்
அசல் வழக்கு எண்.49/2011
அ. அசன்முகம்மது ராவுத்தர்        …………… வாதி
                                                        -எதிராக-
ப. ராமச்சந்திரன்             ……………..பிரதிவாதி

வழக்கு சுருக்கம்:
“1. தாவா சொத்தின் சுவாதீனத்திலிருந்து பிரதிவாதியை வெளியேற்றி தாவா சொத்தின் சுவாதீனத்தை வாதிக்கு கொடுக்க பிரதிவாதிக்கெதிராக தீர்ப்பு செய்தும், வாதிக்கு, பிரதிவாதி தாவா சொத்திற்கான செலுத்தி வைக்க வேண்டிய 29 மாத வாடகைப் பாக்கி ரு.43.500/-ம், பிற்கால மாத வாடகையையும் வாதிக்கு பிரதிவாதி வழங்க கோரியும், வழக்கின் செலவு தொகை கோரியும் வாதியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”

“6. எழுவினா 1
வாதி தாவா சொத்தில் உரிமையாளர் என்பதும் பிரதிவாதி வாடகைதாரர் என்பதும் வாதி, பிரதிவாதிகளுக்கு இடையே 1.12.2007-ல் தாவா சொத்து குறித்து வாடகை ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதும் அது வா.சா.ஆ.3 என்பதும், வாடகை ஒப்பந்தத்தின் படிக்கு தாவா சொத்தின் புத்தக கடை மடடும் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், வேறு தொழில்கள் செய்யக்கூடாது என்பதுவும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. வாதி தரப்பில் மேற்படி வா.சா.ஆ.3 வாடகை ஒப்பந்தபடிக்கு பிரதிவாதி புத்தக கடை வைத்துக்கொள்வதற்கு மட்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது எனவும் ஆனால் பிரதிவாதி தாவா சொத்தில் வெடிபொருட்கள் வைத்து விற்பனை செய்வதாகவும். எனவே பிரதிவாதி ஒப்பந்தத்தை மீறி உள்ளார் எனவும் வாதிடப்பட்டது. ஆனால் வாதி தரப்பில் வெடிபொருட்கள் பிரதிவாதியால் விற்பனை செய்யப்பட்டது என்பதற்கு எவ்வித சாட்சியும், சான்றாவணங்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை. மேலும் வா.சா.1 தனது குறுக்குவிசாரணையின் போது 

“தாவா சொத்தில் பிரதிவாதி விக்னேஸ் புத்தக கடை வைத்திருக்கிறார்”

என சாட்சியம் அளித்துள்ளார். எனவே வாதி தரப்பில் பிரதிவாதி ஒப்பந்தத்தை மீற வெறு தொழில் செய்து வருகிறார் என்பதை வாதி தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.”

“பிரதிவாதி தனது குறுக்கு விசாரணையில்

1.12.2007க்கு பின்னர் எந்த வாடகை ஒப்பந்தமும் நான் வாதியுடன்
ஏற்படுத்திகொள்ளவில்லை “

என சாட்சியமளித்துள்ளார்.
எனவே வாய்மொழி ஒப்பந்தம் 31.10.2008-ல் வாதிக்கும், பிரதிவாதிக்கும் ஏற்பட்டது என்பதனை பிரதிவாதி தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஆனாலும் மேற்படி தேதிக்கு பின்னிட்டு தற்போது வரை பிரதிவாதி தாவாச் சொத்தில் கடை நடத்தி வருகிறார் என்பது இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. வாதி தரப்பில் கடந்த 30.11.2010-ம் தேதியில் வா.சா.ஆ.4-ன் மூலம் பிரதிவாதிக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு அதில் வாடகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்றும், 30.12.2010-ம் தேதிக்குள் வாடகையை செலுத்தியும், 1.11.2011-ம் தேதியன்று தாவா சொத்தின் சுவாதீனத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி #சொத்துரிமை மாற்று சட்டம் பிரிவு 106-ன் கீழ் அறிவிப்பு அனுப்பியுள்ளார். அதை பிரதிவாதி வா.சா.ஆ.5 ஒப்புகை அட்டையின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார். அதன் பின்னிட்டு பிரதிவாதி வா.சா.ஆ.6-ன் மூலம் பதிலும் அனுப்பியுள்ளார். மேற்படி வாடகை ஒப்பந்தம் வா.சா.ஆ.3 பரிசீலனை செய்ததில் மாத வாடகைக்கு பிரதிவாதி குடியிருந்து வருவது தெரியவருகிறது. எனவே சொத்து உரிமை மாற்று சட்டப்படி சொத்தினை காலி செய்வதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து வா.சா.ஆ.4 மூலம் வாடகை ஒப்பந்தத்தை வாதி முறிவு செய்திருப்பது தெரியவருகிறது. பிரதிவாதி தரப்பில் மேற்படி அறிவிப்பு சட்டப்படி செல்லதக்க அறிவிப்பு அல்ல என்று எவ்வித வாதமும் மேற்கொள்ளவில்லை. எனவே வாதி பிரதிவாதிகளுக்கிடையே வாடகை தாரர் மற்றும் உரிமையாளர் என்கிற உறவு சட்டப்படி முடிந்துவிட்டது என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. வாதிக்கும், பிரதிவாதிக்கும் இடையே உள்ள உரிமையாளர்-வாடகைதாரர் உறவு முடிவு பெற்றுள்ளதால் வாதி சுவாதீன பரிகாரம் பெற உரிமையுள்ளவர் என்றும் இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.”

“முடிவாக தாவா சொத்தின் சுவாதீனத்திலிருந்து பிரதிவாதியை வெளியேற்றி தாவா சொத்தின் சுவாதீனத்தை வாதிக்கு அளிக்க கோரும் பரிகாரம் வாதிக்கு கிடைக்கதக்கது எனவும், வாதிக்கு பிரதிவாதி செலுத்தவேண்டிய வாடகை பாக்கியான ரு.3.500/-ஐ செலுத்த வேண்டும் என்றும், பிரதிவாதி 1.1.2011-ம் தேதி முதல் காலி சுவாதீனத்தை வாதிக்கு அளிக்கும் வரை மாத இழப்பீடு தொகையாக ரு.1.500/-ஐ பிரதிவாதி வாதிக்கு செலுத்தவேண்டும் எனவும், தீர்ப்பளிக்கப்படுகிறது. வழக்கு சொத்தின் சுவாதீனத்தை இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் பிரதிவாதி காலிசெய்து காலி சுவாதீனத்தை வாதிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு வழக்கு செலவு தொகையுடன் அனுமதிக்கப்படுகிறது."

No comments:

Post a Comment